தமிழ்நாடு

மயிலாடுதுறை: அமிர்தகடேஸ்வரர் கோயிலில் 25 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா

JustinDurai

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோயிலில் 25 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோயில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்தக் கோயிலில் கடந்த 1997ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதன்பிறகு, 25 ஆண்டுகளுக்கு பின் குடமுழுக்கு விழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் குவிந்த நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குடமுழுக்கு நிகழ்ச்சியின்போது முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதி அளிக்கப்பட்டது.

பக்தர்கள் கோயிலுக்கு வெளியே இருந்து குடமுழுக்கை கண்டனர். குடமுழுக்கு முடிந்த பின்னர் பக்தர்கள் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டனர். என்றும் இளமையுடன் இருப்பதற்காக மார்க்கண்டேயன் வரம் பெற்ற கோயிலாக அமிர்தகடேஸ்வரர் கோயில் கருதப்படுகிறது. சாகாவரம் வேண்டி 60, 80, 90, 100 வயதுகளில் இந்தக் கோயிலில் திருமணம் செய்துகொள்வது நம்பிக்கையாக உள்ளது.

இதையும் படிக்க: “தமிழால், தமிழராய் இணைந்து தமிழை வளர்ப்போம்”- துபாயில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு