தமிழ்நாடு

அதிமுகவில் 8,200 விருப்ப மனுக்கள் - நாளை ஒரே நாளில் நேர்காணல்

Sinekadhara

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அதிமுகவில் 8,200 பேர் விருப்பமனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் விருப்பமனு அளிக்க நேரம் பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கி இன்று மாலை 5 மணியுடன் கடைசி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை 8,240 மனுக்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்தமுறை கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் அதிகமான மனுக்கள் வந்திருந்த நிலையில், இந்த ஆண்டு குறைவாகவே வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விருப்ப மனு அளிக்க கடைசி தேதி மார்ச் 5 என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தல் தேதி வெளியான காரணத்தினால் இரண்டு நாட்களுக்கு முன்பே அதிமுக முடித்துக்கொண்டுள்ளது.

விருப்ப மனு அளித்துள்ள அனைவரிடமும் நேர்க்காணலை நாளை ஒரேநாளில் அதிமுக நடத்த திட்டமிட்டுள்ளது. நாளை காலை 9 மணியிலிருந்து இரவு 8 மணிவரை நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

திமுகவில் விருப்ப மனு அளித்த 7,967 பேரிடம் நேற்றுமுதல் நேர்காணல் நடைபெற்று வருகிறது.