தமிழ்நாடு

சென்னையில் அதிமுக அதிருப்தி நிர்வாகிகள் அவசர ஆலோசனை - யார், யார் தெரியுமா?

ஜா. ஜாக்சன் சிங்

சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வலியுறுத்தி வரும் கட்சியின் அதிருப்தி நிர்வாகிகள் புகழேந்தி, ஆவின் வைத்தியநாதன் ஆகியோர் சென்னையில் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ. ராஜாவும் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் நடந்து முடிந்த தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. இதன் தொடர்ச்சியாக, அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கையை கட்சி நிர்வாகிகள் சிலர் முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக, சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் சில கட்சி நிர்வாகிகள் குரல் கொடுத்தனர். இதையடுத்து, அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்த சூழலில், கடந்த வாரம் திருச்செந்தூருக்கு வந்திருந்த சசிகலாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செலவத்தின் சகோதரர் ஓ. ராஜா சந்தித்து பேசினார். இது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர் உடனடியாக அவரையும் கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டது.

இந்நிலையில், சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வலியுறுத்தி வரும் கட்சியின் அதிருப்தி நிர்வாகிகள் புகழேந்தி, ஆவின் வைத்தியநாதன் ஆகியோர் சென்னையில் உள்ள உட்லண்ட்ஸ் ஹோட்டலில் இன்று அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்தக் கூட்டத்தில் ஓ. ராஜாவும் பங்கேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.