உயிரிழந்த பூர்ணிமா
உயிரிழந்த பூர்ணிமா புதியதலைமுறை
தமிழ்நாடு

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனின் மருமகள் உயிரிழப்பு.. என்ன நடந்தது?

PT WEB

செய்தியாளர் - ச.குமரவேல்

-----

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகனின் இளைய மகன் சசிமோகன். இவரது மனைவி பூர்ணிமா, கடந்த 18ம் தேதி மாலையில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் உள்ள தனது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தார். பூஜை அறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது விளக்கு தீ பிடித்ததில் அவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இதில் சுமார் 80% தீ காயத்துடன் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வார காலமாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், பூர்ணிமா சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

இறப்பு அறிக்கை காரிமங்கலம் போலீசாருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான விவரங்களை காரிமங்கலம் போலீசார் மருத்துவமனை மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசாரிடம் வழங்கிய பிறகு பிரேத பரிசோதனை தொடங்கும் என்று தெரிகிறது. பிரேத பரிசோதனையானது, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு தருமபுரி மாவட்டம் பாலக்கோடு எடுத்துச் செல்லப்பட உள்ளது.

அன்பழகனின் இளைய மகன் மற்றும் பூர்ணிமா இருவரும் கடந்த 2019ம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாக 4 ஆண்டுகள் ஆன நிலையில் தீவிபத்தில் சிக்கி பூர்ணிமா உயிரிழந்தது குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கிடையே, முன்னாள் அமைச்சரது மருமகளின் இறப்பு குறித்த செய்தி அறிந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.