தமிழ்நாடு

கறுப்பர் கூட்டம் ஆனாலும் சரி... காவி கொடி பிடிப்பவர்களானாலும் சரி..! - அதிமுக

webteam

கறுப்பர் கூட்டம் ஆனாலும் காவி கொடி பிடிப்பவர்கள் ஆனாலும் ஒருமைப்பாட்டை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என நமது அம்மா நாளிதழ் விமர்சனம் செய்துள்ளது.

இதுகுறித்து நமது அம்மா நாளிதழில் பாஜகவின் வானதி சீனிவாசன் வேல் யாத்திரையை முடக்க நினைப்பது எதிர்வினையை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளது குறித்து பதில் அளித்துள்ளது. அதில் "சாதியாலும் மதத்தாலும் மக்களை பிளவுபடுத்துகிற உள்நோக்கம் கொண்ட ஊர்வலங்களை யாத்திரைகளை அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகம் ஆமோதிக்காது, ஆதரிக்காது என்பதை உரியவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். 

மனிதத்தை நெறிப் படுத்தவே மதங்களே அன்றி வெறி படுத்துவதற்காக அல்ல என்பதை இந்திய தேசத்திற்கே உணர்த்துகிற பகுத்தறிவு மண் தமிழகம் என்பதை தொடர்ந்து தமிழக மக்கள் நிரூபித்திருக்கிறார்கள். 

ஓம் என்று ஒலிக்கும் இந்து மந்திரத்தின் பொருள் அமைதி, நிறைவு கொள் என்பதாகும். அதுபோலவே ஆமென் என்கிற கிறிஸ்தவ மந்திரத்தின் பொருளும் அமைதிகொள், சாந்தமடை என்பதாகும். அது போலவே இஸ்லாம் என்பதன் பொருளும் அமைதி, சமாதானம் என்பதாகும். 

இப்படி மதங்கள் அனைத்தும் போதிப்பது அமைதி, அன்பு, சாத்வீகத்தை தான். இப்படி இருக்க அந்த மதங்களின் பெயரால் வாக்கு வங்கி அரசியலுக்கு வழிபடுவதை சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட அதிமுக அனுமதிக்காது. இதனை வேல் யாத்திரை செல்பவர்கள் உணர வேண்டும். 

அமைதி தவழும் தமிழகத்தில் மக்கள் பின்பற்றும் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் உணர்ந்து நடக்க வேண்டும். அது கருப்பர் கூட்டம் ஆனாலும் சரி. காவி கொடி பிடிப்பவர்கள் ஆனாலும் சரி" எனத் தெரிவித்துள்ளது