தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ. 15 லட்சம் உதவித் தொகையை அதிமுக அறிவித்துள்ளது.
தமிழக வீராங்கனையான கோமதி மாரிமுத்து, ஆசிய தடகளப்போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவுக்கான முதல் தங்கப்பதக்கத்தை பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அவருக்கு முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதுதவிர சமூக வலைத்தளங்களிலும் கோமதி மாரிமுத்துக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதனிடையே தங்கப் பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு திமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் பரிசுத்தொகை அறிவிக்கப் பட்டன. திமுக சார்பில் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்த அதன் தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் அந்த தொகையை அவரிடம் வழங்கினார். அப்போது கோமதியின் தாயும் உடனிருந்தார்.காங்கிரஸ் கட்சி யும் அவருக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை அறிவித்தது.
இந்நிலையில் அதிமுக சார்பில் அவருக்கு ரூ.15 லட்சம் உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு வெள்ளிப் பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜூக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகையையும் அதிமுக அறிவித்துள்ளது.