தமிழ்நாடு

தங்கமாக இருக்க வேண்டிய மின்சார வாரியம் பித்தளையாக மாறியதற்கு யார் காரணம்? - திமுக

கலிலுல்லா

கடந்த ஆட்சி காலத்தில் தங்கமும் மணியுமாக ஆக இருக்க வேண்டிய தமிழ்நாடு மின்சார வாரியம், இன்று ஈயம் பித்தளை ஆக மாறியதற்கு யார் காரணம் என்றும் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் கேள்வி எழுப்பினர்.

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், ''எழும்பூர் ரயில் நிலையத்திற்கு முத்தமிழ் அறிஞர் கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும்'' என கோரிக்கை விடுத்தார். மேலும் பேசிய அவர், ''கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழக மின்வாரியம் அதானி குழுமத்திடமிருந்து மின்சாரத்தை ஒரு யூனிட் ஏழு ரூபாய் என்று ஏன் வாங்கப்பட்டது? மகாராஷ்டிராவில் 5 ரூபாய்க்கு வாங்கும் போது தமிழகத்தில் மட்டும் ஏன் ஏழு ரூபாய்க்கு வாங்கப்பட்டது? 'மேட்ச் பிக்சிங்' என்று கேள்விப்பட்டிருக்கிறோம்; ஆனால் அதிமுக ஆட்சியில் மின்சாரம் கொள்முதலில் 'பர்ச்சேஸ் பிக்சிங்' நடந்துள்ளது.

கடந்த ஆட்சி காலத்தில் தங்கமும் மணியுமாக ஆக இருக்க வேண்டிய தமிழ்நாடு மின்சார வாரியம், இன்று ஈயம் பித்தளை ஆக மாறியதற்கு யார் காரணம்'' என அவர் கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, ''ஆதாரம் இருக்கிறதா?'' என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பரந்தாமன், ''சிஏஜி அறிக்கையின் 2013- 2018 புத்தகத்தில் பாருங்கள். அதில் ஆதாரம் இருக்கிறது'' என பரந்தாமன் விளக்கம் அளித்தார்.