நகர்புற தேர்தலில் போட்டியிடும் இடங்கள் தொடர்பாக அதிமுக - பாஜக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இழுபறி நீடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணிகளுக்கு இடங்களை ஒதுக்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், கட்சிகளிடையேயான இடங்களை ஒதுக்குவது தொடர்பான பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், கடந்த 3 மணிநேரத்துக்கும் மேலாக அதிமுக - பாஜக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அதிமுக பாஜக கூட்டணி தொடர்பாக மூத்த தலைவர்களுடன் பாஜக தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தி வருகிறார். அவருடன் பொன். ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், கேசவ விநாயகம் சி.பி.ராதாகிருஷ்ணன், சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதிமுக தரப்பில், 'மாநகராட்சிகளில் அதிக இடங்களை வழங்க முடியாது. நகராட்சி பேரூராட்சிகளில் குறிப்பிட்ட இடங்களை தர தயாராக இருக்கிறோம். அதே நேரத்தில் பாஜக அந்த இடங்களில் பெற்று வெற்றி பெற வேண்டும். எங்களது கட்சியினருக்கு வழங்கும் இடங்களை உங்களக்கு அளிக்கிறோம் எனில் அதில் வெற்றி பெற வேண்டும். நாங்களும் போட்டியிடுகிறோம் என இருப்பதால் ஒரு பயனும் இல்லை. வேறு ஒருத்தரின் வாய்ப்பை நீங்கள் பெறுகிறீர்கள் என்பதையும் மனதில் கொள்ளுங்கள்'' என அதிமுகவினர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.