தமிழ்நாடு

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை: ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

webteam

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இதுவரை 267 சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக காவல்துறை மற்றும் தடயவியல் துறையினரிடம் விசாரணை நடைபெற உள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்ததைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை இன்று உதகை மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சயான், வாளையார் மனோஜ், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி உள்ளிட்ட நான்கு பேர் மட்டும் ஆஜராகினர்.

இந்நிலையில், கூடுதல் சாட்சிகளை விசாரிக்க வேண்டியுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், மற்றும் கனகராஜ் தரப்பினர் வாதங்களை வைத்த நிலையில், வழக்கு விசாரணையை 26.08.2022 அன்று ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இது குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜஹான் கூறுகையில், கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இதுவரை 267 சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ள நிலையில், சயான் குடும்பத்தினர் விபத்து குறித்தும், கனகராஜ் வாகன விபத்து குறித்தும் புலனாய்வு கட்டமாக மேற்கொள்ள வேண்டியுள்ளதால் வழக்கு விசாரணைக்கு அவகாசம் கேட்டனர். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை 26.08.2022-க்கு ஒத்திவைக்கப்பட்டது.