தமிழ்நாடு

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்பு?

Sinekadhara

தமிழ்நாட்டில் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டித்து டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க தமிழ்நாட்டில் மேலும் ஒருவாரம் ஊரடங்கை நீட்டிக்க முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உயரதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

ஏற்கெனவே அமலில் உள்ள ஊரடங்கு வருகிற 14-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், ஊரடங்கை மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிக்க உயரதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். இந்த நீட்டிப்பின்போது, 27 மாவட்டங்களில் நடைபயிற்சிக்கு அனுமதி உள்ளிட்ட மேலும் சில தளர்வுகள் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனா அதிகமுள்ள 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள 27 மாவட்டங்களில் மட்டும் நேரக் கட்டுப்பாட்டுடன் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மத வழிபாட்டுக்கூடங்களுக்கு அனுமதி இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. புதிய தளர்வுகள் என்னென்ன என்பது குறித்த அறிவிப்பை முதல்வர் நாளை வெளியிடுவார் என்று கூறப்பட்டுள்ளது.