தமிழ்நாடு

போதுமான நிதியை ஒதுக்கி தமிழை வளர்க்க கூடுதல் நடவடிக்கை வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு

webteam

தமிழ் மொழியை வளர்க்க கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,'மதுரையில் உலக தமிழ் சங்கம் திறக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்க மேலாகியும் தமிழ் மொழி வளர்ப்புக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. நூலகத்தில் தரமான நூல்கள் இல்லை. உலக தமிழ் சங்கத்தில் உள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து தமிழ் நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள், தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி நூல்களை வைக்கவும், நூலகத்தில் புதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார்.

இந்நிலையில், கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மதுரை உலக தமிழ்ச்சங்கம் சார்பில் துணை இயக்குநர் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு, 'தமிழ் மொழியை வளர்க்க கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். போதுமான அளவு நிதியை ஒதுக்கி, சங்ககால தமிழ் இலக்கியம் குறித்தும் நவீன கால தமிழ் இலக்கியம் குறித்தும் பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.