Trisha
Trisha twitter
தமிழ்நாடு

"எந்தநிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்கள்” - அவதூறு பேச்சுக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம்

Prakash J

அதிமுகவில் சேலம் மேற்கு ஒன்றியச் செயலாளராக இருந்தவர் ஏ.வி.ராஜு. இவர் சமீபத்தில் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். நீக்கப்பட்டது முதல் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகிறார்.

இந்த நிலையில், ஏ.வி.ராஜு சமீபத்தில் கலந்துகொண்ட பத்திரிகையளர்கள் சந்திப்பில், நடிகை த்ரிஷாவைத் தொடர்படுத்தி மிகவும் மோசமான சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியிருந்தார். அதிமுக தரப்பில் பலரையும் வம்பிற்கு இழுத்து பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஏ.வி.ராஜுவின் கருத்துக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தம்முடைய எக்ஸ் தளத்தில், ’கவனத்தை ஈர்ப்பதற்காக எந்தநிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மற்றும் கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பானது. தேவையான, கடுமையான நடவடிக்கை சட்டப்படி எடுக்கப்படும் என்பதை உறுதி செய்கிறேன். இதற்குமேல் மற்றவற்றை என்னுடைய வழக்கறிஞர் குழு பார்த்துக் கொள்வார்கள்’ என அதில் தெரிவித்துள்ளார்.

இவரது இந்த பேச்சுக்கு தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிமுகவில் சமீபத்தில் இணைந்த நடிகை காயத் ரி ரகுராம், “நடிகர்களை தரக்குறைவாக பேசிய இவர் மீது நடிகர் சங்கம் நிச்சயம் வழக்கு தொடர வேண்டும். அதேபோல ராஜு இந்த மனநிலையுடன் சென்று பாஜகவில் இணைந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். அத்தகையவர்களை அவர்கள் வரவேற்பார்கள். NCW இதைக் கண்டு அமைதியாக இருக்கிறது, குஷ்பமும் இதுவரை எதுவும் பேசவில்லை. ஒரு நடிகையாக நான் வருத்தப்படுகிறேன். இது போன்ற மோசமான கருத்துக்களை எதிர்கொள்ளும் எந்த நடிகைக்கும் நான் துணை நிற்பேன்" என்று அவர் தனது பதிவில் கூறியுள்ளார்

இயக்குநர் சேரன், “எந்த ஆதாரமும் இன்றி திரைத்துறையினர் மீது அவதூறு பரப்பும் சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அதேபோல், தொழிலாளர் அமைப்பான ஃபெப்சியும் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளது.