நடிகை சுகன்யா - கேப்டன் விஜயகாந்த்
நடிகை சுகன்யா - கேப்டன் விஜயகாந்த் web
தமிழ்நாடு

”கண்ணாடி துகள்கள் கிடந்ததால் க்ளைமேக்ஸில் நடிக்க பயந்தேன்.. அவரால் அது சாத்தியமானது!”- நடிகை சுகன்யா

Rishan Vengai

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை உயிரிழந்த நிலையில் அவரது உடல் முதலில் சாலிகிராமத்தில் இருந்த அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. பின், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டது.

பின்னர் இட நெருக்கடி காரணமாக சென்னை ராஜாஜி அரங்கில் அவரது உடல் வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், சென்னை தீவுத்திடலில் அவரது உடல் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்று அதிகாலை தீவுத்திடலுக்கு உடல் கொண்டு வரப்பட்டது. தொடர்ச்சியாக தொண்டர்களும், ரசிகர்களும், அரசியல் தலைவர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவருடைய உடலை அரச மரியாதையுடன் அடக்கம்செய்ய எடுத்துச்செல்லப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் போகும் வழியில் கண்ணீருடன் கேப்டனை வழியனுப்பினர்.

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்துடன் சின்னகவுண்டர் முதலிய படங்களில் நடித்த நடிகை சுகன்யா, கேப்டன் குறித்த படப்பிடிப்பு தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

நான் இருக்கன் பயப்படாதிங்கனு சொன்னார்!

விஜயகாந்த் குறித்து பேசிய நடிகை சுகன்யா, “மிகவும் தன்மையான மனிதர். படப்பிடிப்பில் அவருடன் சேர்ந்து நடிக்கும் அனைவருக்கும் பாதுகாப்பான உணர்வு ஏற்படும். தைரியமாக இருக்கலாம், எந்த பிரச்னை என்றாலும் தயங்காமல் அவரிடம் சொல்லலாம். ஒரு ஹீரோவா மட்டுமில்லாமல் அனைத்திலும் சரியாக இருக்க வேண்டும் நினைக்கும் ஒரு நபர். அந்த விசயத்தில் “இப்படி ஒரு நடிகர் இருப்பாரா” என அவரை பார்ப்பதற்கே வியப்பாக இருக்கும். அவர் இருக்கும் போது யாரும் பசியோடு இருக்க மாட்டார்கள், அனைவருக்கும் உதவிசெய்யக்கூடியவர். செல்ஃபோன் இல்லாத காலகட்டத்தில் கூட அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் செய்துகொடுப்பார்” என புகழ்ந்து பேசினார்.

விஜயகாந்த்

படப்பிடிப்பில் நடந்த சம்பவம் குறித்து பேசிய சுகன்யா, “சின்னகவுண்டர் படத்தில் க்ளைமேக்ஸ் காட்சியில் நடிக்க மிகவும் பயந்தேன். பெட்ரோல் பாம்ப் வெடித்த பிறகு இரண்டுபேரும் மலையில் இருந்து உருண்டுவரக்கூடிய காட்சி, அந்த சீன்ல எப்படி பண்ணுவன்னு ரொம்ப பயந்தன். கடைசி சில நாட்களா சண்டை காட்சிகள் நடந்ததால நிறைய கற்கள், கண்ணாடி துண்டுகள் சிதறி கிடந்தது. இதுல எப்படி உருண்டு போகப்போறனு அதிகமா பயப்பட ஆரம்பிச்சிட்டன். எப்படி சொல்றதுனு முழிச்சிட்டு இருந்தப்போ, என்ன பார்க்குறிங்க பயப்படாதிங்க நான் இருக்கன் உங்களுக்கு எதுவும் ஆகாதுனு விஜயகாந்த் சொன்னார். பின்னர் உருண்டுவரப்போ எனுக்கு சின்ன கீறல் கூட ஏற்படாதவகையில தாங்கிபிடிச்சிகிட்டே, அந்த கற்கள், க்ளாஸ் துண்டுகள் மேல அவர் உருண்டுவந்தார். எனக்கு இப்படி ஒரு சின்சியரான நடிகரா என பயங்கர ஆச்சரியமாக இருந்தது” என சுகன்யா பகிர்ந்துள்ளார்.