தமிழ்நாடு

மிரட்டல் வீடியோவை வெளியிட்டார் நடிகை ஸ்ருதி

மிரட்டல் வீடியோவை வெளியிட்டார் நடிகை ஸ்ருதி

webteam

தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் தற்கொலை செய்துக் கொள்ள போவதாக மிரட்டல் விடுத்தவரின் வீடியோவை நடிகை ஸ்ருதி வெளியிட்டுள்ளார். 

மேட்ரிமோனியல் மூலமாக திருமணம் செய்து கொள்வதாக கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்பட்ட வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்து உள்ள நடிகை ஸ்ருதி, தன் மீது பண மோசடி புகார் செய்த நபர் தன்னை காதலிக்க வேண்டும் என வற்புறுத்திய வீடியோக்களை தற்போது வெளியிட்டு உள்ளார். இதனால் சம்மந்தப்பட்ட நபரை திருமணம் செய்யாததாலேயே பொய்ப் புகாரை அளித்ததாகவும் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கோவை, சென்னை, நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் வெளிநாட்டில் பணியாற்றும் மென்பொறியாளர்களை குறிவைத்து மேட்ரிமோனியல் மூலம் தொடர்புக்கொண்டு திருமணம் செய்துக்கொள்வதாக கூறி சுமார் ரூ.2 கோடியே 5 லட்சத்து 85 ஆயிரத்து 305 ரூபாய் மோசடி செய்ததாக கடலூரை சேர்ந்த நடிகை ஸ்ருதி, வளர்ப்பு தந்தை பிரசன்னா வெங்கடேசன், தாய் சித்ரா, சகோதரர் சுபாஷ் ஆகிய நான்கு பேரை கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த ஜனவரி 11ஆம் தேதி கோவையில் கைது செய்தனர். கோவையில் 4 வழக்குகளும்,நாகப்பட்டிணத்தில் 2 வழக்குகளும், சென்னையில் ஒரு வழக்கு என மொத்தம் 7 வழக்குகள் ஸ்ருதி உட்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஸ்ருதி, அவரது தாய் சித்ரா, வளர்ப்பு தந்தை பிரசன்னா வெங்கடேசன், சகோதரர் சுபாஷ் ஆகிய நால்வரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.  இந்நிலையில் இவர்கள் ஜாமீனில் வெளியே வந்து உள்ளனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தன்னை விசாரித்த காவல்துறை அதிகாரி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது, தன் மீது பண மோசடி புகார் தெரிவித்த அமுதன் என்ற நபர், தன்னை காதலிக்க வலியுறுத்தி தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறி மிரட்டிய வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். இதன் மூலம், அவரை காதிலிக்க தான் மறுத்ததால் இதுபோன்று பொய்ப் புகாரை தன் மீது சுமத்தி உள்ளதாக ஸ்ருதி தெரிவித்து உள்ளார். எனவே தன் மீது போடப்பட்டிருக்கும் வழக்கு திட்டமிட்ட சதி என்பதால் அதனை சட்ட ரீதியாக சந்திப்பேன் என்று அவர் கூறினார்.