தமிழ்நாடு

அவதூறு கருத்துக்களை பரப்பியதாக கிஷோர் கே சாமி மீது நடிகை ரோகிணி புகார்

EllusamyKarthik

தன்னை பற்றியும், மறைந்த நடிகர் ரகுவரன் குறித்தும், பாஜக மூத்த தலைவர்கள் குறித்தும் இழிவான கருத்தை பதிவிட்ட கிஷோர் கே.சாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை ரோகிணி புகார் அளித்துள்ளார்.

திரைப்பட நடிகையும், மறைந்த நடிகர் ரகுவரனின் மனைவியான ரோகிணி ஆன்லைன் மூலமாக கிஷோர் கே.சாமி என்பவர் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், “கடந்த 2014 ஆம் ஆண்டு கிஷோர் கே.சாமி எனது பேஸ்புக் வலைதள பக்கத்தில் மறைந்த நடிகர் ரகுவரன் மற்றும் என்னை பற்றியும் இழிவுப்படுத்தும் வகையில் கருத்தை பதிவிட்டிருந்தார். இந்த தவறான கருத்துகளால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. இதே போல் பாஜக மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், இல கணேசன், வானதி ஸ்ரீனிவாசன், தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பதிவிட்டிருந்தார். இதனால் கிஷோர் கே.சாமி மீது நடவடிக்கை எடுக்கக் வேண்டும்” என்று ரோகிணி குறிப்பிட்டுள்ளார்.

கிஷோர் கே.சாமி முன்னாள் முதல்வர்கள், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும், பெண் பத்திரிக்கையாளர் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பதிவிட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார். அதனை தொடர்ந்து விசிக துணை பொதுசெயலாளர் வன்னியரசு மற்றும் தற்போது நடிகை ரோகினி ஆகியோர் மேலும் கிஷோர் கே.சாமி மீது புகார் அளித்துள்ளனர். ரோகிணி அளித்துள்ள புகார் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளதாகவும் அது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.