actress Ranjana Nachiar pt desk
தமிழ்நாடு

அரசு பேருந்தை வழிமறித்து நடத்துனருடன் வாக்குவாதம்: நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது

அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை அடித்து இறக்கிவிட்டதாக பாஜகவைச் சேர்ந்த நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டார்.

webteam

சென்னையில் போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில், தொங்கியபடி ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் சிலர் பயணம் செய்துள்ளனர். இதைக்கண்ட பேருந்துக்கு பின்னால் சென்ற பெண் ஒருவர் வேகமாகச் சென்று பேருந்தை வழி மறுத்துள்ளார். அந்த அரசு பேருந்து ஓட்டுநரிடம் “மாணவர்கள் ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டு வருகிறார்கள். இப்படியா பேருந்தை ஓட்டுவீர்கள்?” எனக்கூறி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் அவர்.அ

Actress Ranjana Nachiar

பின்னர் பேருந்தில் தொங்கியபடி சென்ற மாணவர்களின் சட்டையை பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளார். தொடர்ந்து நடத்துனரிடம் ஆவேசமாக ஒருமையில் பேசி அவரையும் திட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து பலரும் அப்பெண்ணுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ரஞ்சனா நாச்சியார் என்ற அந்த பெண் பாஜகவைச் சேர்ந்தவர் என்றும், நடிகை என்றும் தெரியவந்தது.

இதனையடுத்து அரசு அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்தது, மற்றும் மாணவர்களை தாக்கியது உட்பட மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் அவர்மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், கைது செய்ய அவருடைய வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவரை கைது செய்து விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணைக்கு ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்ட காட்சி இங்கே...