தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகை சாந்தினி வழக்கு

Sinekadhara

முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகை சாந்தினி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக நடிகை சாந்தினி அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பெங்களூருவில் இருந்த மணிகண்டனை கடந்த ஜூன் 20ம் தேதி கைதுசெய்தனர். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்நிலையில், தனக்கு 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க மணிகண்டனுக்கு உத்தரவிடக் கோரி நடிகை சாந்தினி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், சென்னையில் இருந்துகொண்டு வழக்கை நடத்தவேண்டும் என்ற காரணத்தினாலும், தனக்கு மாதாந்திர இடைக்கால தொகை வழங்கவேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழும்போது பிரச்னை ஏற்பட்டால் இழப்பீடு கோருவதற்கான நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடிகை வழக்கு தொடர்ந்துள்ளார். மாத செலவுகள், மருத்துவ செலவு, வாடகை போன்றவற்றிற்கான இடைக்காலத் தொகையாக ரூ 2.80 லட்சம் வழங்கவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கின் விசாரணையை சைதாப்பேட்டை நீதிமன்றம், ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.