தமிழ்நாடு

கொடைக்கானல் ஏரியில் அனுமதியில்லாமல் மீன்பிடித்ததாக நடிகர்கள் விமல், சூரி மீது புகார்

கொடைக்கானல் ஏரியில் அனுமதியில்லாமல் மீன்பிடித்ததாக நடிகர்கள் விமல், சூரி மீது புகார்

kaleelrahman

ஊரடங்கு காலத்தில் அனுமதியில்லாமல கொடைக்கானல் அடர் வனப்பகுதியில் உள்ள பேரிஜம் ஏரியில் மீன்பிடித்ததாக நடிகர் விமல் மற்றும் சூரி மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுப்பதற்காக போடப்பட்டுள்ள ஊரடங்கால் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வருபவர்கள் இ-பாஸ் எடுத்துக் கொண்டுதான் வரவேண்டும். அதுவும் இப்போது எளிதாக இ-பாஸ் கிடைப்பதில்லை.


இந்நிலையில் நடிகர் பரோட்டா சூரி மற்றும் விமல் ஆகியோர் கடந்த வாரம், கொடைக்கானல் வந்து தங்கியுள்ளனர். பின்பு வனத்துறை அலுவலர்களின் உதவியுடன் தடை செய்யப்பட்ட பகுதியியல் உள்ள பேரிஜம் வனப்பகுதிக்குச் சென்று அங்குள்ள ஏரியில் மீன் பிடித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. தகவல் அறிந்த வனத்துறையினர் விசாரணை செய்து, அபராதம் விதித்த பின்பு இருவரையும் அனுப்பியதாக கூறப்படுகிறது.


சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படத்தின் அடிப்படையில், மகேந்திரன் என்பவர் இன்று கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் கூறுகையில் ஊரடங்கு காலத்தில் நடிகர்கள் இருவரும் எப்படி கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வந்தனர் என்றும், தடை செய்யப்பட்ட வனப்பகுதி வழியாக எவ்வாறு அவர்கள் பேரிஜம் ஏரிக்கு சென்றார்கள் என்பது குறித்தும் விசாரணை செய்து வருவதாகவும், விசாரணைக்கு பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


ஊரடங்கு காலத்தில் கொடைக்கானல் மலைபகுதியில் உள்ள சாமனியர்கள் அத்தியாவசிய தேவைக்கே வீட்டைவிட்டு வெளியேவர தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர்கள் எவ்வாறு இவ்வளவு சுதந்திரத்துடன் உலாவருகிறார்கள் என்று பொதுமக்களின் கேள்வி எழுப்புகின்றனர்.