தமிழ்நாடு

``என் மகளை மீட்டுக்கொடுங்க”- குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் நடிகர் தாடி பாலாஜி மனு

நிவேதா ஜெகராஜா
தனது மகளை, தன் மனைவியிடம் இருந்து  மீட்டுத் தருமாறு தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் நடிகர் தாடி பாலாஜி கோரிக்கை மனு அளித்துள்ளார்.
நடிகர் தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு முதல் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களது 12 வயது மகள், தாடி பாலாஜி மனைவியிடம் இருந்து வளர்ந்து வருகிறார். பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் அந்தக் குழந்தை, மனைவி நித்யாவின் தவறான வழிகாட்டுதலால் சமூக வலைதளத்தில் காணொலி பதிவிடுவதாகவும், இதனால் அவரது படிப்பு பாதிக்கப்படுவதாகவும் புகார் கூறியுள்ளார் தாடி பாலாஜி.
இதுகுறித்து பேசுகையில், “நித்யாவை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. அவர் வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் வாழட்டும். அதில் நான் தலையிட மாட்டேன். ஆனால் என் மகளின் வாழ்க்கை வீணாவதை என்னால் பார்த்து கொண்டிருக்க முடியாது” எனக்கூறுகின்றார் அவர். இதைக் குறிப்பிட்டு தனது மகளை, மனைவி நித்யாவிடமிருந்து மீட்டுத் தருமாறு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் அவர் மனு அளித்திருக்கிறார்.
தன்னைப்பற்றி தன்னுடைய மகளை வைத்து அவதூறாக கருத்துக்களை பேசி அதன் மூலம் தன்னை மிரட்டி பணம் கேட்பதாகவும் தாடி பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.