தேசியக் கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் கருத்தை ஆமோதிப்பதாக கூறிய ரஜினிகாந்துக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவக்குமாரின் அறக்கட்டளையான அகரம் பவுண்டேஷனின் 40-ம் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாக கூறி ஆதங்கப்பட்டார். புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்தும் கடுமையாக விமர்சனங்களை வைத்தார் நடிகர் சூர்யா.
சூர்யாவின் கருத்துக்கு எதிராக அமைச்சர் கடம்பூர் ராஜூ, பாஜக தமிழக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கருத்து தெரிவித்தனர். இருந்தாலும் சூர்யா கருத்துக்கு ஆதரவாக அமைச்சர் ஜெயக்குமார், சீமான் ஆகியோர் கருத்து தெரிவித்தனர். சர்ச்சை ஏற்பட்ட நிலையில், அறிக்கை வெளியிட்ட சூர்யா, சம வாய்ப்பும், தரமான கல்வியும் மறுக்கப்பட்ட மாணவர்களின் நிலையை உணர்ந்து, சக மனிதனாக, ஒரு குடிமகனமாக தமது கருத்தை தெரிவித்ததாக பதிலடி கொடுத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த், சூர்யாவின் கருத்தை தாம் ஆதரிப்பதாக கூறினார். சூர்யாவின் இன்னொரு முகம் சில நாட்களுக்குமுன் தமக்கு தெரிந்தது என்றும் கூறிய அவர், நடிகர் சூர்யாவின் பேச்சு பிரதமர் நரேந்திர மோடிக்கு கேட்டுள்ளது என்றும் பேசியிருந்தார்.
இந்நிலையில், தனக்கு ஆதரவு தெரிவித்த ரஜினிக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தனது வாழ்நாளில் இது மறக்கமுடியாத நினைவு எனவும் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.