தமிழ்நாடு

“ கல்வியை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது...”சூர்யா கொடுத்த பதிலடி

Rasus

சமமான வாய்ப்பும், தரமான கல்வியும் மறுக்கப்பட்ட மாணவர்களின் நிலையை உணர்ந்தே, புதிய தேசிய கல்விக்கொள்கை குறித்து தாம் கருத்துக் கூறியதாக நடிகர் சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் நாட்டில் கல்வியானது, ஏழைகளுக்கு ஒன்றாகவும், வசதி படைத்தவர்களுக்கு ஒன்றாகவும் இருக்கிறது என்பதை உணர புள்ளி விவரங்கள் தேவையில்லை. மனசாட்சியே போதுமானது என கூறியுள்ளார். அப்படிப்பட்ட மனசாட்சிதான்,  அனைவருக்கும் சமமான தேர்வு வைப்பதை விட, ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளுக்கும் சமமான, தரமான இலவசக் கல்வியை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்று வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

புதிய தேசிய கல்விக் கொள்கையில், எல்லா விதமான பட்டப் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வை பரிந்துரை செய்திருப்பது அச்சமூட்டுவதாகவும், இந்த நுழைவுத் தேர்வுகள், உயர்கல்வியில் இருந்து கிராமப்புற மாணவர்களை துடைத்து எறிந்துவிடும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை குறித்து கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர் அமைப்புகள், பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்து அதில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள நடிகர் சூர்யா, ஏழை மாணவர்களுக்கான கல்வியே உயர பறப்பதற்கான சிறகு, அது முறிந்து போகாமல் இருக்க அனைவரும் துணை நிற்போம் என்றும் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கல்வியைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது என தம்மை விமர்சித்து கருத்துகள் வந்தபோது, தமக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக சூர்யா கூறியுள்ளார்.