"எனது ஞானத் தந்தையை இழந்துவிட்டேன். அழியாத படைப்புகளால் என்றென்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பார்" என்று எழுத்தாளர் கி.ரா மறைவுக்கு நடிகர் சிவக்குமார் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
கி.ரா. என அழைக்கப்படும் பிரபல எழுத்தாளர் கி.ராஜாநாராயணன் உடல் நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 99. 'கரிசல் இலக்கியத்தின் தந்தை' என்றழைக்கப்பட்ட கி.ரா. என்னும் கரிசல்காட்டுப்பூ உதிர்ந்துவிட்டாலும் அவரது எழுத்துகள் என்றென்றும் மணம்வீசிக்கொண்டே இருக்கும்.
எழுத்தாளர் கி.ரா. மறைவுக்கு நடிகர் சிவக்குமார் பகிர்ந்த புகழஞ்சலி:
"நான் பிறந்த பத்து மாதத்தில் என் தந்தையை இழந்துவிட்டேன். தற்போது 80 வயதில் எனது ஞானத் தந்தை 99 வயது வாழ்ந்த கி.ரா.-வை இழந்துவிட்டேன். கி.ரா. அவர்களும், கணபதி அம்மாளும் எனக்கு இன்னொரு தாய் - தந்தையர். எனக்கு அவருக்கும் 35 வருட காலமாக உறவு உண்டு. அவர் சம்பந்தபட்ட பல விழாக்களில் புதுச்சேரி சென்று கலந்துகொண்டிருக்கிறேன்.
அந்த மகத்தான மனிதர் கரிசல் மண்ணை பற்றி எழுதிய கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், கரிசல்காட்டு கடுதாசி, வட்டார வழக்கு சொல்லகராதி போன்ற அழியாத படைப்புகளால் என்றென்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பார்.
அவரது ஆன்மா சாந்தியடையட்டும். இந்தக் கொரோனா பொது முடக்கத்தால் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செய்ய முடியாயததற்கு மனமார வருந்துகிறேன். மீண்டும் அவரது சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்."