சரத்குமார்
சரத்குமார் PT
தமிழ்நாடு

சிவகாசி: தனியார் கல்லூரியின் ஆண்டுவிழா கொண்டாட்டம்: அறிவுரை வழங்கிய சரத்குமார்

PT WEB

விருதுநகர் அருகே சிவகாசி தனியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 8-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் சரத்குமார் கலந்துகொண்டு சிறப்பித்தார். கல்லூரியின் செயலாளர் கார்வண்ணன், தாளாளர் முனைவர் கணேசன், துணை செயலாளர் முனைவர் கா. விக்னேஷ்குமார் மற்றும் அனைத்து அறக்கட்டளை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறையை சேர்ந்த முனைவர் பத்மநாபன் வரவேற்புரை வழங்கினார். அடுத்ததாக பேசிய கல்லூரி முதல்வர் முனைவர் சேகர், சென்ற கல்வியாண்டில் கல்லூரி அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் சாதனைகளை ஆண்டறிக்கையாக வழங்கினார்.

மேலும் அவரது அறிக்கையில், அடுத்தடுத்த இலக்குகளை அடைய கல்லூரிக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நிர்வாகத்தினர் என அனைவரின் ஒத்துழைப்பும் மிக அவசியம் என கேட்டுக்கொண்டார். வாழ்த்துரை வழங்கிய தாளாளர் கணேசன், மாணவர்கள் நன்கு பயின்றிடும் வகையில் அனைத்து விதமான ஆதரவுகளையும் பஞ்சு ராஜன் அமராவதி அறக்கட்டளை கொடுக்கும் எனத் தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய நடிகர் சரத்குமார், ”அடுத்த நொடி என்ன நடக்கும் என்று தெரியாத இந்த வாழ்க்கையில் இளைஞர்களாகிய நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஆனால் அனைத்தையும் மனக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும். தினமும் காலையில் எழும்பொழுது கண்ணாடியை பார்த்து உங்களுக்கு நீங்களே தன்னம்பிக்கை ஊட்டும் விதத்தில் பேசிக் கொள்ளுங்கள். நம்மால் முடியும் என்ற ஒரு உற்சாகத்தை தினமும் காலையிலேயே உங்களுக்கு உங்கள் மனதிற்கு அளியுங்கள்.” என்றார்.

மேலும் அவர் ”இந்தியா 2025 ஆம் ஆண்டு அதிகமான இளைஞர்களை கொண்ட நாடாக இருக்கப்போகிறது, அதிலும் பொறியியல் கல்லூரி மாணவர்களின் பங்கு அதில் மிக மிக முக்கியம்” எனவும் கூறினார்.

அடுத்ததாக சிறப்பு விருந்தினர் கல்லூரியின் செய்திமடலை வெளியிட அவற்றை கல்லூரி நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். கடந்த கல்வியாண்டில் சிறப்பாக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பஞ்சுராஜன் - அமராவதி அறக்கட்டளையின் சார்பாக பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் 15-ஆவது மற்றும் 17-வது இடத்தை பிடித்த செல்வி ஹரிணி மற்றும் செல்வி ஹவுசிகா ஸ்ரீ ஆகியோருக்கு நான்காண்டு கல்வி கட்டணத் தொகை முழுவதுமாக திரும்ப கொடுக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக பருவ தேர்வுகளில் நூறு சதவிகித தேர்ச்சி பெற்றுத்தந்த ஆசிரியர், ஆசிரியைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்த ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டன. மேலும் அறிவு சார் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பல்வேறு துறையினைச் சார்ந்த மாணவ மாணவிகள் ஆடல் பாடல், நகைச்சுவை நாடகம் என தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியின் நிறைவாக கணினி அறிவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவன் புவனேஷ் நன்றி உரை வழங்கினார்.