நடிகர் ரஜினிகாந்தை பார்ப்பதற்காக சென்ற இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், ரசிகர் ஒருவர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிகொடுத்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். ரஜினிகாந்தை நேரில் பார்க்க விரும்பிய அவரின் ரசிகர் பால கணேஷ் என்பவர், அங்கு சென்றார். விவிஐபி நுழைவு வாயில் அருகே ரஜினிகாந்த் வந்தபோது, ரசிகர்கள் பலர் முண்டியடித்துக் கொண்டு ரஜினியுடன் செல்ஃபி எடுத்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பாலகணேஷ் வைத்திருந்த 40 ஆயிரம் ரூபாய் பணத்தை யாரோ திருடிவிட்டனர்.
தனியார் நிறுவனத்தை நிர்வகித்துவரும் பால கணேஷிடம், ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக தங்க நகைகளை அடமானம் வைத்து பணம் திரட்டியதாகவும், ரஜினிகாந்தை பார்ப்பதாக வந்த இடத்தில் அதனை பறிகொடுத்துவிட்டதாகவும் பாலகணேஷ் வேதனையுடன் கூறினார். துரித விசாரணை நடத்தி பணத்தை கண்டுபிடித்துத்தர வேண்டுமென காவல்துறைக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.