யோகி ஆதித்யநாத், ரஜினி
யோகி ஆதித்யநாத், ரஜினி புதிய தலைமுறை
தமிழ்நாடு

உத்தரப்பிரதேச முதல்வர் காலில் விழுந்தது ஏன்? விமர்சனத்துக்குப் பதிலளித்த ரஜினி!

Prakash J

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 9-ஆம் தேதி இமயமலை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து ஆன்மிகப் பயணத்தில் ஈடுபட்டிருந்த ரஜினி, அதற்குப் பிறகு ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து உரையாடினார். பின்னர், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலை லக்னோவில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

அதைத்தொடர்ந்து கடந்த 19ஆம் தேதி லக்னோவில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்துப் பேசினார். அதற்கு முன்பு, அவரது காலில் விழுந்து ரஜினிகாந்த் ஆசிர்வாதம் வாங்கிய வீடியோ இணையதளங்களில் வைரலாகியது.

தவிர, இந்த நிகழ்வு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. பலரும் இதுகுறித்து விமர்சித்திருந்தனர்.

இதுகுறித்து ஆர்.ரவி என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், ”இங்கே பலருக்கு ரஜினி தன்னைவிட வயது குறைந்தவர் காலைத் தொட்டு வணங்குகிறார் என்பது பிரச்னை இல்லை. அவர் வணங்குபவர் தாங்கள் சித்தாந்த ரீதியில் ஏற்காத பாஜகவில் இருப்பதுதான் பிரச்னை” எனப் பதிவிட்டிருப்பதுடன், ஏற்கெனவே இதேபோன்று வயது குறைவானவரின் காலைத் தொட்டு வணங்கியதாக புகைப்படம் ஒன்றையும் அதில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து இன்று நெல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “யோகி ஆதித்யநாத் காலில் சூப்பர் ஸ்டார் சென்று விழுந்து வருகிறார். பூனைகுட்டி வெளியே வந்துவிட்டது. நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்திருந்தால், முதல்வர் ஆகியிருந்தால் யோகி ஆதித்யாநாத் முதல்வர் ஆனதுபோல் அல்லவா ஆகியிருக்கும் தமிழ்நாடு. எவ்வளவு பெரிய வேதனை? எவ்வளவு உயர்வான மதிப்பை அவர்மீது வைத்திருக்கிறோம்.

Thirumavalavan

இப்படிப்பட்டவர்கள்தான் கருத்து உருவாக்கம் செய்யும் இடங்களில் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களிடமிருந்து தமிழ்நாட்டை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையே நாம் காப்பாற்றியாக வேண்டும் என கடுமையாக விமர்சித்திருந்தார்.

முதல்வர்களையும் தலைவர்களையும் சந்திப்பது பிரச்னை அல்ல. காலடியில் விழுந்தது, அவரை நீங்கள் உயர்வாக மதிப்பதுபோலவே இருக்கட்டும். ஆனால் தமிழக மக்கள் உங்களை எவ்வளவு உயர்வாக மதித்து இருந்தார்கள். அதை நீங்கள் இப்படி ஒரு நிகழ்விலேயே காட்டிவிட்டீர்கள்.

இந்த நிலையில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர், “சந்நியாசி ஆகட்டும், யோகி ஆகட்டும்... அவர்கள் வயதில் சின்னவராக இருந்தாலும் அவர்களின் காலில் விழுவது எனது பழக்கம். அதைத்தான் நான் செய்தேன்” எனப் பதிலளித்துள்ளார்.