பெற்றோர் இல்லா குழந்தையை தத்தெடுத்து அவனுக்கு சுஜித் என பெயரிட்டு வளர்க்கவும் என நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த, குழந்தை சுஜித் உயிரிழந்துவிட்டான். 80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்தன. சுஜித்தின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் " குழந்தை சுஜிதின் மரணத்தால் இன்று அக்டோபர் 29 எனது பிறந்த நாளை கொண்டாட மனம் வரவில்லை.
ஒட்டுமொத்த தேசத்தின் கண்களையும் குளமாக்கி விட்டு சென்று விட்டான் சுஜித். அவனை அரவணைக்கத் தவறிய காலமும் இங்குள்ள சூழலும் வேதனைக்குரியது. இந்நிலையில் சுஜித்தின் பெற்றோருக்கு சொல்ல விரும்புவது.. சுஜித் இன்று நம் தேசத்தின் பிள்ளையாகி விட்டான். அதுபோல் இந்தத் தேசமெங்கும் எத்தனையோ பிள்ளைகள் பெற்றோரின்றி இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பிள்ளையை எடுத்து அந்த பிள்ளைக்கு சுஜித் எனப் பெயரிட்டு வளர்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன். அதன் மூலம் ஒரு குழந்தைக்கு நீங்கள் வாழ்க்கை கொடுத்ததாகவும் இருக்கும், சுஜித்தின் ஆத்மா சாந்தியடையும், சுர்ஜித்தும் தங்களுடனே இருப்பான். அப்படி நீங்கள் குழந்தைய தத்தெடுக்க நினைத்தால் நானே குழந்தையை தத்தெடுத்துக் கொடுக்கிறேன். அவன் படிப்பு செலவு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.