தமிழ்நாடு

அணி தாவும் அரசியல் களேபரத்தில்... அனிதா மரணம் பற்றி பார்த்திபன்

அணி தாவும் அரசியல் களேபரத்தில்... அனிதா மரணம் பற்றி பார்த்திபன்

webteam

நீட் தேர்வு காரணமாக மருத்துவர் கனவு கலைந்ததால், குழுமூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். அரசியல் தலைவர்கள் பலரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் தனது வருத்தங்களை பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

அணி தாவும் அரசியல் ஆடுகள களேபரத்தில்... 
அனிதாவும் இன்னும் பலியாகும் உயிர்களும் இனியும் ஆகும். இனியாவும் நலமாகுமென நம்பி அனிதாவின் குடும்பத்தார்க்கு வருத்தச் செய்தி மட்டும் வாசித்துவிட்டு நகர்தலும் வன்முறையே. 

வாழவே துவங்காத ஓர் இளம் பெண், தன் இன்னுயிரை மாய்த்துக் கொ(ல்)ள்ளும் முன்  என்னவெல்லாம் யோசித்திருக்கலாம்? அதில் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பதே பிரதம கோரிக்கையாக இருந்திருக்கவேண்டும். அந்த நீள் கனவோடே அவரின் மீளா கண்ணடைத்தல் நிகழ்ந்திருத்தல் வேண்டும். ஏழைகளின் ஓலத்திற்கும் ஒப்பாரிக்கும் ஜிஎஸ்டி போட்டு விசும்பலாக்க, நடுவண் அரசு நன்கு அறிந்திருக்கிறது தானே... செய்துக்கொண்டால்தானே அது தற்கொலை? ஒரு நாடே சேர்ந்து ஒருவரை கொலை செய்தால் அதெப்படி தற்கொலையாகும்? 
நூறு உயிர்களையாவது காக்கவே ஒரு மருத்துவர். அம்மருத்துவரையே கொல்வது ? பெருந்துயர்! இனி மறு துயர்- மறு தவற் நிகழுமுன் தடுக்க, இன்று கோர்க்கும் இளைஞர்களின் கரங்கள் விலகா போர் நிகழ வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.