தமிழ்நாடு

ஓபிஎஸ் உடன் திடீர் சந்திப்பு.. அதிமுகவில் இணைந்தார் இயக்குநர் பாக்கியராஜ்!

webteam

''ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை நல்ல பெயரோடு நடத்தி வந்தார்'' எனக் கூறியுள்ளார் நடிகர் பாக்கியராஜ்.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனியாக செயல் பட்டு வருகின்றனர். இதனால் அக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் திரைப்பட இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் இன்று நேரில் சந்தித்தார். அப்போது அதிமுக ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதுகுறித்து நடிகர் பாக்கியராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், ''தமிழக மக்கள் நலனை கருத்தில் கொண்டுதான் அதிமுக கட்சியை எம்.ஜி.ஆர் துவங்கினார். அவருக்கு பின் ஜெயலலிதா அவருடைய பாதையில் கட்சியை நடத்தினார். அதன் பின் ஓபிஎஸ் கட்சியை நல்ல பெயரோடு நடத்தி வந்தார்.

கட்சிக்கு சோதனை வந்து உள்ளது. கட்சி முன்புபோல வரவேண்டும் என்பதற்காக தான் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பன்னீர்செல்வம் தெரிவித்து வருகிறார். நானும் அதையேதான் சொல்கிறேன். அதற்காக என்னை இணைத்து கொண்டு என்னால் செய்ய முடிந்ததை செய்வேன்.

சிறிய தொண்டனாக என்னால் முடிந்த பணிகளை நான் மேற்கொள்வேன். விரைவில் அனைவரும் ஒன்று சேருவார்கள். முறையாக இணையவில்லை என்றாலும் தற்போது அதிமுகவில் இணைந்து உள்ளேன். முடிந்தால் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து ஒற்றுமை குறித்து பேசுவேன்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: `அங்க நிக்குது திமுக-வின் விஞ்ஞானபூர்வ ஊழல் திறமை!’- அண்ணாமலை கடும் விமர்சனம்!