Ajithkumar ANI
தமிழ்நாடு

“இது ஒரு மாபெரும் பாய்ச்சல்” - CM விஜயை புகழ்ந்த அஜித்! நடந்தது என்ன?

முதலமைச்சர் விஜயின் செயல்பாடுகள் குறித்து நடிகர் அஜித்குமார் சொன்ன கருத்து, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

PT WEB

செய்தியாளர் - கார்த்திகேயன்

தமிழ் சினிமாவின் இரு துருவங்கள் என்றால் அஜித்-விஜய் ஆகிய இருவரை நிச்சயமாக சொல்ல முடியும். இவா்கள் இருவருக்கும் இடையே மிகப்பெரிய போட்டி நிலவி வந்தாலும், உண்மையில் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றே சொல்லப்படுகிறது.

தற்போது, சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகியுள்ள விஜய், அரசியலில் நுழைந்து மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறார். இப்படியான சூழலில், முதலமைச்சர் விஜயின் புதிய நடவடிக்கை ஒன்றை, நடிகர் அஜித்குமார் வெகுவாக பாராட்டியுள்ளார். அதாவது, கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி அன்று சட்டப்பேரவையில் பேசும்போது, தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

CM vijay

இந்த திட்டத்தின்படி, சர்வதேச தரத்திலான மோட்டார் பந்தயத் தடம் அமைக்கப்படும், நவீன உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தித் தரப்படும், இளம் வீரர்களை கண்டறிந்து, அவர்களுக்கான பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், ஃபார்முலா 1 முதல் 4 வரையிலான போட்டிகளை நடத்துவதற்கான அதிநவீன வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்றும், சர்வதேச அளவிலான பந்தய வீரர்கள் உருவாகுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் விளையாட்டு சுற்றுலா, வேலைவாய்ப்பு, கார், சிறப்பு வாகன உற்பத்தி உள்ளிட்ட துறைகள் வளர வாய்ப்பு இருப்பதாகவும் அரசு கருதுகிறது. இந்நிலையில், முதலமைச்சர் விஜயின் இந்த முன்னெடுப்புக்கு, நடிகரும், மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரருமான அஜித்குமார் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

CM Vijay

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களை வளர்ப்பதற்காக அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்றும், முதலமைச்சர் விஜயின் விளையாட்டு துறை தொடர்பான அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளார். தமிழக அரசின் இந்த ஒரு சிறிய முன்னெடுப்பு, இந்திய மோட்டார்ஸ் போர்ட்ஸுக்கு மாபெரும் பாய்ச்சலாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.