தமிழ்நாடு

கிருஷ்ணகிரி: பறவைகள் சரணாலயமாக மாறிய சின்னேரி - ஏரியை சுத்தப்படுத்த ஆர்வலர்கள் கோரிக்கை

kaleelrahman

கிருஷ்ணகிரியில் பறவைகளின் சரணாலயமாக மாறியது சின்னேரி. பொதுமக்களை கவரும் வகையில் ஏரியை சுத்தம்செய்து அழகுபடுத்த வேண்டும் என சமூக ஆர்வாலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் உள்ள சின்னேரி மழையால் நிரம்பி தற்போது சமுத்திரம் போல காட்சியளிக்கிறது. இதனால் இந்த ஏரி தற்போது பறவைகளின் சரணாலயமாக மாறியுள்ளது. குளிர்காலம் துவங்கியுள்ளதால் ஏரிக்கு வரும் பறவைகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிரித்துக்கொண்டே வருகிறது.

இந்நிலையில், நாரைகள், நீர் கோழிகள், நீர் காகம் போன்ற நீர் பறவைகள், நத்தை கொத்தி, நீர்மூக்கன் பறவை, கூழக் கடா உள்ளிட்ட பல்வேறு வகையான வெளிநாட்டுப் பறவைகளும் அதிகமாக வந்த கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ஏரி முழுதும் முட்புதர்களால் மண்டிக் கிடப்பதோடு, எரியைச் சுற்றி, இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதால் ஏரி துர்நாற்றத்தோடு மிகவும் மாசடைந்த நிலையில் காணப்படுகிறது.

எனவே, மிகவும் மோசமான நிலையில் உள்ள இந்த ஏரியை சுத்தம்செய்து அழகுபடுத்தி பறவைகளின் சரணாலயமாக மாற்றி ஏரியை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.