ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பினர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்தனர்.
நெரிக்கல் மேட்டில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் "நீ பெரியாரின் வெங்காயத்தை என் மீது வீசு, நான் என் தலைவன் கொடுத்த வெடிகுண்டை உன் மீது வீசுகிறேன்; உன்னை புதைச்ச இடைத்தில் புல் முளைக்காது பி கேர் புல்" எனப் பேசினார்.
மேலும்,இனவெறி கொள்ளுங்கள் என இனவெறியை தூண்டி இனமோதலை தூண்டி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் இந்திய இறையாண்மைக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பேசியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீமான் மீது சட்ட நடவடிக்கையும் தொடர்ந்து இடைத்தேர்தலில் பரப்புரை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பினர் தங்களது மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.