தமிழ்நாடு

புகார் அளித்த பெண் வேண்டாம் என்றாலும் பாலியல் தொல்லை அளித்தவர் மீது நடவடிக்கை - நீதிமன்றம்

Veeramani

பாலியல் தொந்தரவு அளித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என சம்பந்தப்பட்ட பெண் சொன்னாலும், நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு இருக்காது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பெண் ஊழியர் ஒருவருக்கு, வழக்கறிஞர் சங்கத் தலைவர் முனியசாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. அதற்கான சிசிடிவி ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் பேரில், ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அறிக்கை தாக்கல் செய்தார். அதில், வழக்கறிஞர் சங்கத் தலைவர் முனியசாமி அளித்த பாலியல் தொல்லையால், தன்னை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு சம்பந்தப்பட்ட பெண் ஊழியர் கேட்டுக் கொண்டதால், அவரது கோரிக்கை ஏற்பட்டு, வேறு நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், முனியசாமி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என பெண் ஊழியர் கேட்டுக்கொண்டதால், பாலியல் தொந்தரவு குறித்த புகார் முடித்து வைக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பாக உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த விவகாரம் நீதிமன்ற பெண் ஊழியர்களின் பாதுகாப்பு தொடர்பானது எனக் கூறினார். பாதிக்கப்பட்ட பெண், நடவடிக்கையை தொடர வேண்டாம் என கூறினாலும், நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருக்காது என தெரிவித்தார். வழக்கறிஞர் சங்கத் தலைவர் முனியசாமி மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி பரிந்துரைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.