தமிழ்நாடு

மீஞ்சூர்: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தம்பதி மீது ஆசிட் வீச்சு - போலீஸ் விசாரணை

webteam

மீஞ்சூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வயதான தம்பதி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்கள் கைவரிசையா என மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த மெரட்டூர் கிராமத்தை சேர்ந்த வயதான தம்பதி மணி - கலாவதி ஆகியோர் தனியே வசித்து வருகின்றனர். விவசாயியான மணி மற்றும் அவரது மனைவி கலாவதி ஆகியோர் நேற்றிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் திடீரென ஜன்னல் வழியே மர்மநபர்கள் சிலர், வயதான தம்பதி மீது ஆசிட் வீசியதாக தெரிகிறது.

முதியவர்கள் சுதாரித்த சிறிது நேரத்தில் மீண்டும் இரண்டாவது முறையாக ஜன்னல் வழியே ஆசிட் வீசப்பட்டதால், இதில் ஆசிட் மணியின் உடலில் விழுந்ததில் காயம் ஏற்பட்டுள்ளது. முதியவர்கள் சுதாரித்து விளக்குகளை எரியவிட்ட நிலையில், மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆசிட் வீச்சில் காயமடைந்த முதியவர் மணி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றார். இதுகுறித்து அளிக்கப்பட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் போலீசார் தடயங்களை சேகரித்து வழக்குபதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர். தனியாக வசிக்கும் முதியவர்கள் மீது ஆசிட் தெளித்து மயக்கமடைந்ததும் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்கும் நோக்கில் கொள்ளையர்களின் கைவரிசையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முதியவர்கள் மீது ஆசிட் தெளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.