தமிழ்நாடு

நூறு நாள் வேலை திட்டத்திற்காக ரூ.949 கோடி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

JustinDurai

மகாத்மா காந்தி தேசிய  ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் படி நூறு நாள் வேலை திட்டத்திற்காக ரூ. 949 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி துறை செயலாளர் அமுதா வெளியிட்டிருக்கும் அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் கிராமப் பகுதிகளில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் நடைபெறும் இந்தப் பணிகளில் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.

நீர் நிலைகளைத் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் இந்தத் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டதால் மண் மூடிக் கிடந்த நீர் செல்லும் பாதைகள் பலவும் புத்துயிர்ப்புடன் காணப்படுகின்றன. அதனால் மழை பெய்ததும் குளம், ஏரி உள்ளிட்டவை விரைவாக நிரம்பி வருகின்றன

இந்த நிலையில், ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் 100 நாள் வேலை திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.அந்த கோரிக்கையின் அடிப்படையில் ரூ. 949 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..

இதில் மத்திய அரசு சார்பில் 75% நிதியும், மாநில அரசு சார்பில் 25% நிதியும் ஒதுக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது..

இதையும் படிக்க: தமிழக வளர்ச்சி மாடலை விமர்சித்த ஆளுநர் ஆர்.என்.ரவி - என்ன பேசினார்?