தமிழ்நாடு

விநாயகர் ஊர்வலம் பார்க்க வந்தவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்: நத்தம் அருகே நடந்த சோகம்!

webteam

நத்தம் கோவில்பட்டியில் ஹோட்டலுக்குள் புகுந்த அரசுப் பேருந்தால், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் காயம் அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலிருந்து- மதுரைக்கு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று (செப்.,04) இரவு நத்தத்தில் இருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டு இருந்த அரசுப் பேருந்து நத்தம் அடுத்துள்ள கோவில்பட்டி புளிக்கடை பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த ஹோட்டலுக்குள் பேருந்து புகுந்தது. அங்கு விநாயகர் ஊர்வலம் பார்க்க வந்த பல்வேறு ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது பேருந்து மோதியதில் நத்தம் கோவில்பட்டியை சேர்ந்த தேவராஜ் (59), சிரகம்பட்டியை சேர்ந்த பாண்டி (50) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதேபோல, அங்கே அருகில் இருந்த 7 பேருக்கும் கடுமையான காயம் ஏற்பட்டிருக்கிறது.

இதனையடுத்து காயமடைந்த அனைவரையும் நத்தம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.