தமிழ்நாடு

இளைஞர்களை கவர்ந்த அபிநந்தனின் மீசை ! வைரலாகும் புதிய ஸ்டைல்

Rasus

அபிநந்தன் மீசையால் கவரப்பட்ட இளைஞர்கள் பலரும் அவரைப்போல சிங்கம் ஸ்டைலில் மீசை வைத்து வருகின்றனர்.

தேசமே கொண்டாடும் ஹீரோவாகிவிட்டார் இந்திய விமானப்படை விங் கமாண்டனர் அபிநந்தன். சிறைபிடிக்கப்பட்டிருந்த போதும் கூட, முகத்தில் சிறிய பயம் இல்லாமல் பாகிஸ்தான் ராணுவத்திடம் அபிநந்தன் பேசிய பேச்சு பலரையும் கவர்ந்தது. இந்தியா திரும்பிய அவரை நாடே வரவேற்றது. அபிநந்தனின் வீரம் எவ்வாறு பலருக்கும் பிடித்துபோனதோ, அதனைப்போன்று அவரின் கம்பீர மீசையும் சிறுவர்கள், பெரியவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பலருக்கும் பிடித்துபோய்விட்டது.

குறிப்பாக அபிநந்தன் மீசையால் கவரப்பட்ட இளைஞர்கள் பலரும் அவரைப் போன்று சிங்கம் ஸ்டைலில் கம்பீர மீசை வைத்து வருகின்றனர். அத்துடன் அதுதொடர்பான புகைப்படங்களையும் வெளியிடுகின்றனர். இதனால் அபிநந்தனின் மீசை ஸ்டைல் இணையத்தை கலக்கி வருகிறது. இதுதொடர்பாக இளைஞர் ஒருவர் கூறும்போது, அபிநந்தன் நம் நாட்டின் ரியல் ஹீரோ. அவர் சினிமா ஹீரோ அல்ல. நிஜ ஹீரோ. அவரின் புகைப்படங்களை பார்க்கும் போதெல்லாம் மனதிற்குள் ஒரு புத்துணர்வு கிடைக்கிறது. சமுதாயத்தில் நாமும் ஒரு சிறந்த குடிமகனாகவும், தைரியம் மிக்கவராகவும் விளங்க வேண்டும் என ஆசை வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அவரின் கம்பீர மீசை என்னை அதிகம் கவர்ந்தது. அதனால்தான் அந்த மீசை போன்றே நானும் மீசை வைத்துள்ளேன்” என்றார்.

இதுமட்டுமில்லாமல் சிறுவர்கள் சிறுமியர்கள் சிலர் அபிநந்தனை கௌரவப்படுத்தும் விதமாக, அவரின் புகைப்படங்களை வரைந்து வருகின்றனர். அதுதொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் உலா வருகின்றன. அதிலும் அவர்கள் கவனிக்கத்தக்க வகையில், அபிநந்தனின் மீசையை அழகாக வரைந்துள்ளனர். சில இளைஞர்களோ அபிநந்தனின் புகைப்படத்தையே பேஸ்புக் டிபியாக மாற்றியுள்ளனர். ஒட்டுமொத்தமாக சமூக வலைதளம் கொண்டாடும் ஹீரோவாக அபிநந்தன் மட்டுமில்லாமல் அவரின் மீசையும் மாறியுள்ளது.