தமிழ்நாடு

சசிகலா தலைமையில் அதிமுக செயல்பட வேண்டும் - முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி

கலிலுல்லா

அதிமுக தலைமையை சசிகலா ஏற்கவேண்டும்; டிடிவி தினகரன் வழிநடத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆறுகுட்டி தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, ''ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கட்சியை வழிநடத்திக்கொண்டிருந்தார்கள். தமிழக மக்கள் அதிமுகவை அதிகப்படியாக விரும்பாமல் வாக்களித்திருக்கிறார்கள். தலைமை சரியில்லாத காரணத்தால் இந்த இயக்கம் தொய்வுற்று இருக்கிறது. 4 வருடத்திற்கு முன்பே உள்ளாட்சித்தேர்தலை நடத்தியிருந்தால் அதிமுக வென்றிருக்கும். அதை விட்டுவிட்டார்கள்.

எனவே, சசிகலாவும், டிடிவி தினகரனும் இணைந்து கட்சியை வழிநடத்தினால் தான் அதிமுக தொய்வில்லாமல் வளரும். பெரியகுளத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் சசிகலாவை கட்சியில் இணைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைவரும் இணைந்து அதிமுகவை வழிநடத்த வேண்டும். கடந்த இரண்டு முறை ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தார். ஆனால், இம்முறை எனக்கு வாய்ப்பு தரவில்லை. என்னுடைய இந்த கருத்தில் எந்தசுயநலமும் இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.