தமிழ்நாடு

டிஜிபி அலுவலகம் முன்பு ஒருவர் தீக்குளிப்பு முயற்சி : தடுத்து நிறுத்திய போலீஸ்

webteam

புதுச்சேரியிலுள்ள டிஜிபி அலுவலகம் முன்பு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியிலுள்ள ஆம் ஆத்மி கட்சியில் தொழிற்சங்க தலைவராக மணிமாறன் என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் புதுச்சேரியில் போராளிக்குழு என்ற அமைப்பினை நடத்தி வரும் சுந்தர் என்பவர் தன்னுடைய சொந்த தகவல்களை எடுத்து வைத்து கொண்டு சமூக வலைதளங்களில் போட்டு விடுவேன் என மிரட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார். 

அத்துடன் சமூக வலைத்தளங்களில் பரப்பாமல் இருக்க பணம் தர வேண்டும் என கேட்பதால் அவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் காவல் துறையினர் தனது புகாரை ஏற்க மறுப்பாதாக கூறி இன்று தலைமை டிஜிபி அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மணிமாறனை அருகில் இருந்த போலீசார் நீரை ஊற்றி காப்பாற்றினர். பின்னர் பெரியகடை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிஜிபி அலுவலகம் முன்பு மணிமாறன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் சிறிது நேரம் பரபரப்பினை ஏற்படுத்தியது.