பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆலையம் ஸ்ரீராம் சென்னையில் இன்று காலமானார். 60 வயதான ஸ்ரீராம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இயக்குநர் மணிரத்னத்துடன் இணைந்து ஆலையம் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை ஸ்ரீராம் உருவாக்கினார். அந்த நிறுவனத்தின் சார்பில் முதல் படமாக விஜயகாந்த் நடித்த சத்ரியன் படம் உருவானது. மணிரத்னம் இயக்கத்தில் “திருடா திருடா”, “பாம்பே” ஆகிய படங்களை ஆலையம் தயாரித்தது.
நடிகர் அஜித் குமாருக்கு தொடக்க காலத்தில் முக்கியமான படமாக அமைந்த “ஆசை” படத்தை ஆலையம் நிறுவனம்தான் தயாரித்தது. ஆலையம் ஸ்ரீராம் தயாரிப்பில் வெளியான கடைசி படம், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான “சாமுராய்”. ஸ்ரீராம் தன்னுடைய மனைவி நளினி ஸ்ரீராம் மற்றும் மகன் நிகில் உடன் வசித்து வந்தார். மாரடைப்பால் மறைந்த ஸ்ரீராமின் இறுதி சடங்குகள் நாளை காலை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.