மிதுன்குமார்
மிதுன்குமார் pt desk
தமிழ்நாடு

எவரெஸ்ட் சிகரம் மீது ஏற விரும்பும் தமிழக இளைஞர்... அரசின் உதவி கிடைக்குமா?

webteam

செய்தியாளர்: சரவணபாபு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சிக்காரம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மிதுன்குமார். சமூக அக்கறை கொண்ட இவர், கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வுக்காக தனி நபராக 87நாட்களில் சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். அப்போது இமயமலையின் அழகைக் கண்டு வியந்த மிதுன்குமார் மலையேறுவதில் ஆர்வம் ஏற்பட்டு அதற்கான பயிற்சிகளை விடா முயற்சியுடன் மேற்கொண்டார். சிக்கிம் அரசு நிறுவனத்தில் மலையேறும் படிப்பு மற்றும் மலையேறும் கள பயிற்சிகளை ஏ கிரேட் சான்றுடன் வெற்றிகரமாக முடித்துள்ளார்.

மலையேறும் பயிற்சி

இமயமலையின் சிறு சிறு சிகரங்கள் மீது ஏறியுள்ள மிதுன்குமார், மிகவும் உயரமான எவரெஸ்ட் சாகர் மாதா சிகரத்தில் ஏற உள்ளார். மலையேற்ற பயிற்சி கட்டணங்கள் மற்றும் இதர செலவுகளை மிதுன்குமாரின் பெற்றோர் பெருமளவு செய்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக செலவு செய்ய இயலாமல் தவிக்கின்றனர். இதுவரை மிதுன்குமார் பனிச் சிகரங்களை அடைய பயன்படுத்தப்படும் காலணிகள், பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்களை வாடகைக்கு எடுத்தே பயன்படுத்தி வந்துள்ளார்.

மிதுன்குமாரின் முயற்சிக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் தேவைப்படும் நிலையில் தமிழக அரசின் உதவியை எதிர்பார்த்துள்ளார். இதுவரை தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் சிவக்குமார், ராஜசேகர், முத்தமிழ் செல்வி ஆகியோர் இச்சாதனையை முடித்துள்ள நிலையில், மிதுன்குமார் நான்காவது நபராக நிச்சயம் இமயமலையின் உச்சியை தொட்டு சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.