தமிழ்நாடு

ரயில்வே பிளாட்பாரத்தில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்ட பெண்...! 

webteam

எழும்பூர் ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த இளம் கர்ப்பிணி பெண், நள்ளிரவில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா அருகே உள்ள பாப்பநாடுபேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி ரம்யாவுடன்(25) வேலை நிமித்தமாக சென்னை வந்துள்ளார். பின்னர் இருவரும் ஆந்திரா செல்வதற்காக நேற்று முன் தினம் இரவு எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சென்றனர். அப்போது அவர்களுக்கான ரயில் அடுத்த நாள் காலைதான் புறப்படும் என அறிவிக்கப்பட்டதால் அங்கிருந்த பிளாட்பாரத்தில் படுத்து தூங்கியுள்ளனர். 

இதையடுத்து நடு இரவில் ரம்யாவிற்கு பிரசவ வலி வந்துள்ளது. அப்போது கணவர் நன்கு தூங்கிக் கொண்டிருந்ததால் அவரை எழுப்பாமல் ரம்யா தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்டார். மேலும் தொப்புள்கொடியையும் அவரே அறுத்துக்கொண்டார். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து காலையில் தூங்கி எழுந்த கணவருக்கு மனைவி குழந்தையுடன் இருப்பதைக் கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார். 

இதைத்தொடர்ந்து அங்கு ரோந்து பணிக்கு வந்த ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் இவர்களை பார்த்து அருகில் சென்று விசாரித்தார். விஷயத்தை அறிந்த அவர், ரயில் நிலையத்தில் உள்ள அவசர சிகிச்சை மையத்துக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், ரம்யாவுக்கும் குழந்தைக்கும் முதலுதவி கொடுக்கப்பட்டது. இச்சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.