சில தினங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியை சேர்ந்த ரிதன்யா என்ற இளம்பெண், திருமணமான 2 மாதத்திலேயே வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலகொடுமையை அனுபவித்துவிட்டேன் என்று ஆடியோ மெசேஜ் செய்து அனுப்பிவிட்டு உயிரை விட்ட ரிதன்யாவின் அழுகுரலே நம் செவிகளிலிருந்து மறையாத நிலையில், தற்போது கன்னியாகுமரியிலும் திருமணமான 6 மாதங்களிலேயே வரதட்சணை கொடுமையால் மற்றொரு இளம்பெண் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அடுத்த திக்கணங்கோடு செம்பிலாவிளை பகுதியை சேர்ந்தவர் ராபின்சன். இவரது மகள் ஜெபிலா மேரி (26). பி.எஸ்.சி. நர்சிங் பட்டதாரியான இவர் முட்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். இவரும் இனையம் பகுதியை சேர்ந்த மரிய நிதின் ராஜ் (26) என்பவரும் கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
மரிய நிதின்ராஜ் சென்னையில் உள்ள ஒரு கம்பெனியில் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் வீட்டில் தெரிய வந்ததைத் தொடர்ந்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் 8-ம் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது 50 பவுன் நகை மற்றும் ரூ.50 லட்சம் செலவில் மேல் மிடாலம் பகுதியில் ஒரு புதிய வீடு ஆகியவற்றை சீதனமாக கொடுத்துள்ளனர். திருமணத்துக்கு பின், மேல் மிடாலம் பகுதியில் உள்ள வீட்டில் தான் மரிய நிதின் ராஜ், ஜெபிலா மேரி இருவரும் வசித்து வந்தனர். அவர்களுடன், நிதின்ராஜ் பெற்றோரும் தங்கி இருந்தனர். திருமணத்திற்கு பிறகு மரிய நிதின்ராஜ், வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே ஜெபிலா மேரியின் நகைகளை, மரிய நிதின் ராஜ் மற்றும் அவரது பெற்றோர் வாங்கி அடகு வைத்ததாகவும், அதை திருப்பி கேட்ட ஜெபிலா மேரியை துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம், ஜெபிலா மேரி வீட்டில் தூக்கிட்டுகொண்டதாக கூறப்படுகிறது.
வெளியே சென்று வீட்டுக்கு வந்த கணவர் மற்றும் அக்கம் பக்கத்தினர் தூக்கிட்டுக்கொண்ட ஜெபிலாவை மீட்டு கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த நிலையில், ஜெபிலா மேரி இறந்தது தெரிய வந்தது.
தகவல் அறிந்த கருங்கல் போலீசார் ஜெபிலா மேரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெபிலா மேரி இறந்த தகவல் அறிந்ததும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர்.
இளம்பெண்ணின் மரணத்தை அறிந்து கண்ணீர்விட்ட தாய் மற்றும் உறவினர்கள், வரதட்சணை கொடுமை செய்து கொன்றுவிட்டதாக குற்றஞ்சாட்டி உடலை வாங்க மறுத்து 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் முதற்கட்டமாக மரிய நிதின் ராஜ், அவரது தந்தை மரிய டேவிட் மற்றும் தாயாரை கருங்கல் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெபிலா மேரியின் தாயார் புஷ்பலதா, காவல் நிலையத்தில் அளித்த புகாரில், திருமணமான 2 மாதத்திலேயே எனது மகளிடம் கூடுதல் வரதட்சணையாக ரூ.5 லட்சம் கேட்டு அடித்து தாக்கி கொடுமைப்படுத்தினர். எனது மகள் என்னிடம் எப்படியாவது பணத்தை தயார் செய்து தருமாறு கேட்டாள். நான் உடனே எனது தாலி செயினை அடகு வைத்து ரூ.5 லட்சம் கொடுத்தேன். கணவரின் வீட்டார் எனது மகள் இறந்து விட்டாள் என்பதை கூட கிண்டலாக தெரிவித்தனர். நான் சென்று பார்த்த போது எனது மகளின் கழுத்தில் கயிறால் கயிறு இறுக்கியது போன்ற தடம் இருந்தது. எனது மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளது என கூறினார்.
இந்த நிலையில் ஜெபிலா மரணம் குறித்து ஏடிஎஸ்பி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.