தமிழ்நாடு

மகளிரை உற்சாகப்படுத்த நெல்லையில் நடைபெற்ற மகளிர் அழகிப் போட்டி

webteam

பாளையங்கோட்டையில் குழந்தைகள் மற்றும் மகளிருக்கான அழகிப்போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் சிகை அலங்காரம் மற்றும் அழகு கலை நலச் சங்கத்தின் சார்பில் அழகிப் போட்டி நடைபெற்றது. இதில், சிகை அலங்காரம் மற்றும் அழகு கலை உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் பாளையங்கோட்டையில் மெகந்தி, மேக் அப் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.

இதில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கோவில்பட்டி, கன்னியாகுமரி அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மேலும் குழந்தைகள் மற்றும் மகளிருக்கு என தனித்தனியாகவும் போட்டிகள் நடைபெற்றன. மகளிர் அழகி போட்டியில் பங்கேற்றவர் மட்டுமல்லாது அவர்களை போட்டிக்குத் தயார் படுத்திய அழகு கலை நிபுணர்களும் மேடையில் தோன்றி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

மிஸ் நெல்லை போட்டியில் ஜெயந்தி முதலிடத்தையும், ஸ்ரீலேகா 2 ஆம் இடத்தையும் பெற்றனர். மிஸஸ் நெல்லை போட்டியில் ஜான் பிரிஸ்கா முதலிடத்தையும், ரீனா ஜஸ்டின் 2 ஆம் இடத்தையும் பெற்றனர். இந்த போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்கள் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த போட்டிகள் பெண்களை உற்சாகப்படுத்துவதற்கும் தங்களது திறமையை வெளிக் கொண்டு வரும் வகையிலும் நடைபெற்றதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.