kala
kala pt desk
தமிழ்நாடு

வீட்டு வேலை செய்ய வந்த பெண் 2 நாட்களுக்குப் பிறகு கழிவுநீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்பு

webteam

சென்னை, மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம் மெட்ரோ நகர் 1வது தெரு பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள சுமார் ஆறு வீடுகளிலும் ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கலா (52) என்ற பெண் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். அதனுடன் சேர்த்து வண்டி நிறுத்துமிடம் மற்றும் மொட்டை மாடி உள்ளிட்ட பகுதிகளையும் சுத்தம் செய்து வந்துள்ளார்.

police station

இந்த நிலையில் நேற்று முன்தினம் (புதன்) இவருடைய 2 மகள்கள், வீட்டு வேலைக்கு சென்ற தனது தாயைக் காணவில்லை என மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து நேற்று மாலை 7 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இதனையடுத்து குடியிருப்பில் வசிப்பவர்கள் மதுரவாயல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கழிவுநீர் தொட்டியை ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது அதில் ஒரு பெண் சடலம் கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த சடலத்தை மீட்ட போலீசார், யார் என விசாரித்த போது அது வீட்டு வேலை செய்து வந்த கலா என்பது தெரிய வந்தது. மேற்கொண்டு இதையடுத்து சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.