தமிழ்நாடு

5 1/2 சென்ட் நிலம் யாருக்கு..? குடுமிப்பிடிச் சண்டை போட்ட குடும்பத்தினர்

webteam

கரூரில் சொத்துத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் ஒருவரையொருவர் மூர்க்கத்தனமாகத் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள செம்டாம்பாளையம் கணபதி நகர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமாக 11 சென்ட் நிலம் இருந்துள்ளது. இதில் சரி பாதி நிலமான் 5 1/2 சென்ட் நிலத்தை தனது மகள் பாப்பாத்தியின் பெயருக்கு கோவிந்தராஜ் இறப்பதற்கு முன்பு உயில் எழுதி வைத்துள்ளார். இந்நிலையில் மீதமுள்ள நிலத்தை தங்களுக்குள் பிரித்துக் கொள்வதில் தங்கை பாப்பாத்திக்கும் அவரது அண்ணன் செல்வம் ஆகிய இருவருக்கும் தொடர்ந்து தகராறு நிலவி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை 50 வயதான பாப்பாத்தி, அவரது மகள் 30 வயதான நந்தினி மற்றும் 55 வயதான அண்ணன் செல்வம் மற்றும் 52 வயதான அவரது மனைவி தவ மணி மற்றும் மகன் யுவான் சங்கர் ஆகியோர் அடங்கிய இரு குடும்பத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் அது எல்லைமீறி கைகலப்பாக மாறியுள்ளது. பின்னர் இரண்டு குடும்பத்தினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

இரு குடும்பத்தாரும் மூர்க்கத்தனமாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போது இரண்டு குடும்பங்களை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நிகழ்ந்த சம்பவத்தின் முழு பின்னணி குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.