சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே வீட்டு வாடகை பாக்கி விவகாரத்தில் வடமாநில இளைஞர்களை வீட்டின் உரிமையாளர் கடுமையாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
ஒடிசாவைச் சேர்ந்த சஞ்சய்குமார் சாகு தனது சகோதரருடன் சேர்ந்து தனியார் நிறுவனங்களுக்கு வடமாநில இளைஞர்களை வேலைக்கு அனுப்பும் நிறுவனம் நடத்தி வந்தார். அங்கு பணிபுரிந்த 30க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் அதேபகுதியைச் சேர்ந்த சுரேஷ்ராஜ் என்பவர் வீட்டில் தங்கியிருந்தனர். தற்போது பணி இல்லாததால் வீட்டு வாடகை 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பாக்கி வைத்துள்ளதாகவும் அவர்களில் சிலர் சொந்த ஊருக்கு திரும்பி செல்வதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து வீட்டிற்கு சென்ற சுரேஷ்ராஜ் வாடகை பணம் தராமல் செல்லக்கூடாது எனக்கூறி வடமாநிலத் தொழிலாளர்களை கடுமையாக தாக்கும் வீடியோ வெளியானது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இவர் தேமுதிகவை சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.