நீலகிரியில் தேன் எடுக்க சென்ற பழங்குடி இளைஞர் கரடி தாக்கியதில் படுகாயமடைந்தார்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் உள்ளது பென்னை எனும் பழங்குடி கிராமம். அந்த கிராமத்தை சேர்ந்த கோபால் என்ற பழங்குடி இளைஞர் தனது நண்பரோடு தேன் எடுக்க வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். அப்போது வனத்திற்குள் நாவல்
பழங்களை தின்று கொண்டிருந்த கரடி கோபாலை தாக்கியுள்ளது. சுதாகரித்து கொண்ட கோபால் அருகில் இருந்த கம்பு ஒன்றை எடுத்து கரடியின் வாயில் தற்காப்பிற்காக தடுத்துள்ளார்.
இதில் வலி தாங்க முடியாத கரடி அவரை விட்டுவிட்டு ஓடியுள்ளது. கரடி தாக்கியதில் கால் மற்றும் கையில் காயங்களுடன்
அதிர்ஷ்டவசமாக கோபால் உயிர் தப்பினார். உடன் சென்ற நண்பர் கோபாலை மீட்டு ஊர் மக்கள் உதவியுடன் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். கூடலூரில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், கோபால் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.