படுகாயமடைந்த மாணவன்  மனிஷ் மித்ரன்
படுகாயமடைந்த மாணவன் மனிஷ் மித்ரன்  PT WEB
தமிழ்நாடு

சென்னை : ஆசிரியர் தாக்கியதில் பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம்; அச்சத்தில் உறைந்த சக மாணவர்கள்!

webteam

செய்தியாளர் - வண்ணை ரமேஷ்குமார்

சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி வளாகத்துக்குள் மான் போர்ட்ஸ் என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கேசவன் - குகன்யா என்ற தம்பதியின் மகன் மனிஷ் மித்ரன் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி வீட்டுப்பாடம் முறையாகச் செய்யாததாலும், சக மாணவர்களுடன் விளையாடியதாலும் அந்தப் பள்ளியில் பணிபுரியும் நாயகி என்ற ஆசிரியர் மாணவன் மித்ரனை கன்னத்தில் அடித்துள்ளார். மேலும் காதை பிடித்துத் திருகியதில் காதில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மனிஷ் மித்ரனின் தாய்

இதனால் வலி தாங்க முடியாமல் துடித்த மாணவனை, மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். தற்போது மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து, மனிஷ் மித்ரனின் பெற்றோர் ராயபுரம் காவல்நிலையத்தில் கடந்த 24 ஆம் தேதி புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆசிரியர் நாயகி, மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட பள்ளி

உடனடியாக ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவனின் பெற்றோர் கோரிக்கைவிடுத்துள்ளனர். ஆசிரியர் தாக்கியதில் பள்ளி மாணவனுக்குக் காது கிழிந்த சம்பவம் பள்ளி மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.