தாய்க்காக மகன் கட்டிய தாஜ்மஹால்
தாய்க்காக மகன் கட்டிய தாஜ்மஹால் மாதவன் ஜி
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஒரு தாஜ்மஹால்! திருவாரூரில் தாய்க்காக மகன் கட்டிய ஒரு புதிய அதிசயம்!

PT WEB

திருவாரூர் அருகே அம்மையப்பன் கிராமத்தில் ஷேக்தாவுது -ஜெய்லானிபிவி தம்பதியருக்கு பிறந்தவர் அமுர்தீன் (49). சென்னையில் தொழிலதிபராக உள்ள இவருக்கு நான்கு மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் நடைபெற்று சென்னையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவருடைய தந்தை ஷேக்தாவுது பல ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை எய்திய நிலையில், தாய் ஜெய்லானிபீவி அம்மையார் கடந்த 2020ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

தாய்க்காக மகன் கட்டிய புதிய தாஜ்மஹால்!

தாய் இறந்தபிறகு அமுர்தீன் தனது தாயார் ஜெய்லானி பீவி அம்மையாருக்கு அம்மையப்பன் கிராமத்தில் ஜீம்மா அமைக்க வேண்டும் என விரும்பி உள்ளார். அப்போது தனது கிராமத்தின் அருகே உள்ள காட்டூர் கிராமத்தில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, தனது தாயார் அஞ்சுகம் அம்மையாருக்கு நினைவிடம் அமைத்து மரியாதை செலுத்தி வருவது போன்று, தானும் தனது தாயாரின் மீது கொண்ட பாசத்தால் அவருக்கு நினைவிடத்தை செய்ய தீர்மானித்துள்ளார். அப்போது காதல் மனைவிக்காக ஆக்ராவில் தாஜ்மஹால் கட்டியது போன்று, தனது தாயாரின் மீதான பாசத்தால் ஒரு புதிய தாஜ்மஹாலை கட்ட முடிவெடுத்துள்ளார்.

தாய்க்காக மகன் கட்டிய தாஜ்மஹால்

இந்நிலையில் ஆக்ராவில் உள்ள முகலாய மன்னர் காலத்தின் கட்டமைப்பை போன்று, ராஜஸ்தானில் இருந்து வெள்ளை பளிங்கு கற்களை கொண்டு முழுவதுமாக கட்டமைத்து நினைவிடம் அமைக்கு முடிவு செய்துள்ளார். அதன் அடிப்படையில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் 8 ஆயிரம் சதுர அடியில் அகலம், 46 அடி உயரத்தில் மினார் அமைக்கபட்டது . அழாகாக அமைக்கப்பட்ட இந்த தென்னகத்தின் தாஜ்மஹால் கடந்த 2 ஆம் தேதி எளிமையாக திறக்கப்பட்டது. இதில் தனது தாயாரின் ஜிம்மா மசூதியும், அதன் ஒருபுறம் பிரமாண்டமான பள்ளிவாசல் கட்டிடமும், மறுபுறம் மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில் மதர்ஷா கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து மக்களும் பார்க்கும் வகையில் அனுமதி!

டெல்லிக்கு சென்று உலக அதிசயங்கள் ஒன்றான தாஜ்மஹாலை பார்க்க அனைவராலும் முடியாத நிலையில், எல்லோராலும் பார்க்கும் வகையில் தென் தமிழகத்தில் வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்ட முதல் தாஜ்மஹால் இதுவாகும்.

இங்கு அனைத்து சமுதாய மக்களும் சாதி மத பேதமின்றி பார்த்து செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது அருகே உள்ள கிராம மக்கள் இந்த தாஜ்மஹாலை ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். தனது தாய் மீதான அன்பால் தாஜ்மஹால் கட்டிய மகனை பெரிதும் பாராட்டி வருகின்றனர்.