தமிழ்நாடு

சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் திடீர் தீவிபத்து - மளமளவென எரிந்த தீயால் பரபரப்பு

webteam

கோயம்பேடு - திருமங்கலம் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் சுயதொழில் செய்துவருகிறார். இந்நிலையில் நேற்று கோயம்பேடு அருகே செயல்பட்டுவரும் பிரபல தனியார் மாலுக்கு சென்றுவிட்டு வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக்கொண்டு தனது காரை எடுத்துக்கொண்டு கோயம்பேடு - திருமங்கலம் செல்லக்கூடிய பிரதான சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது காரின் முன்புறத்தில் இருந்து திடீரென கரும்புகை வந்துள்ளது. இதனைக் கண்ட அவர் உடனடியாக சாலையின் ஓரம் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடி உள்ளார். பின்னர் கரும்புகை மளமளவென பற்றி எரிய ஆரம்பித்தது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணா நகர் தீயணைப்பு காவல்துறையினர், பற்றி எரிந்த காரில் தண்ணீரை ஊற்றி உடனடியாக அணைத்தனர். தீயணைப்பு காவல்துறையினர் விரைந்து வந்து துரிதமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து திருமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.